காஞ்சி மஹா ஸ்வாமி அருளால்
அவருக்காக அடியேனின் 98வது பாடல்(14.09.13)
(பிரம்ம முராரி சுரார்சித
லிங்கம் - மெட்டில் பாடவும் )
சந்திர சேகர மஹா ஸ்வாமி
மந்திரம் இன்றி மாயைகள் புரிவீர் வந்திட உம்மிடம் வாழ்வில் வசந்தம்
வந்திடும் உடனே வாசலை தேடி
பூந்தளிர் தேகத்தை பார்த்திட்ட உடனே
பூக்கள் மலரும் மனதில் உடனே
பூப்போல் சிரிப்போம் நாளும் நாங்கள்
பூவாய் மலர்ந்தே அருள்வீர் வரங்கள்
கண் கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பீர்
கண்களால் பார்த்தே முன்வினை தீர்ப்பீர்
கண்கள் கலங்கி குமுறிடு வோர்க்கு
கண்ணனாய் அருள்வீர் காருண்ய பார்வை
நெற்றி விபூதியை கண்டதும் நாங்கள்
பற்றிய வினை தீர்ந்து பாரினில் உயர்வோம்
பற்றியே உந்தன் பாதச் சுவடை
பற்றின்றி வாழ்ந்தே பவித்திர மாவோம்
தண்டம் ஏந்திய தண்ட பாணியாய்
அண்டி வந்தோர்க்கு அபயம் அளிப்பீர்
வேண்டியே வந்து வணங்கிடும் முன்னே
வேண்டிய தருள்வீர் வேதனை தீர்த்தே
கற்பூர ஜோதியாய் காவி யுடுத்தி
அற்புத தரிசனம் அளிப்பீர் நித்தம்
பொற்பாதம் கண்டு வணங்கிய உடனே
அற்புதம் நிகழும் வாழ்வில் திடமே
தும்பிக்கை கணபதி போலவே நீரே
தூக்கி கை காட்டி துயரங்கள் தீர்ப்பீர்
நம்பி கை கூப்பியோர் நலன்கள் பெற்றிட
அம்பிகை மனதோடு அருள்வீர் நீரே
விரும்பியே வந்து வீழ்ந்து வணங்கிட
திரும்பியே செல்லும் தீவினை யாவும்
அரும்பியே வளர்வோம் வாழ்வில் மெல்ல
திரும்பியே வருவோம் திருவருள் அள்ள
ஹர ஹர சங்கர என்றே துதித்திட
வரம் தர வருவீர் வாசல் தேடி
துறவர தூய்மையை காத்திட்ட குருவே
பெருவரம் அருள்வீர் பிறப்பறுத் திடவே
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்
No comments:
Post a Comment